Saturday, October 10, 2020

நீ நீயாக இரு



 நீ . . .நீயாக இரு !
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்ய வேண்டியதை
தங்கம் கொண்டு
செய்ய முடியாது . . .
அதனால்
தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
எனவே நீ . . .நீயாக இரு !

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால்
கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
நீ . . .நீயாக இரு !

காகம் மயில் போல்
அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ
காக்கைக்குத்தான் !
நீ . . .நீயாக இரு !

நாய்க்கு சிங்கம் போல்
வீரமில்லை தான் . . .
ஆனாலும்
நன்றி என்னவோ
நாய்க்குத் தான் !
நீ . . .நீயாக இரு !

பட்டு போல் பருத்தி
இல்லை தான் . . .
ஆனாலும்
வெயிலுக்கு சுகமென்னவோ
 பருத்திதான் !
நீ . . .நீயாக இரு !

ஆகாசம் போல் பூமி
 இல்லைதான் . . .
ஆனாலும்
 தாங்குவதற்கு இருப்பது
பூமிதான் !
நீ . . .நீயாக இரு !

நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால்
 ஒவ்வொன்றும்
 அற்புதம்தான் !
எனவே நீ . . .நீயாக இரு !

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாவம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து
 கொண்டே வா . . .
நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல்
வாழ ஆசைப்படும் ! ! !
நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னை உதாரணமாகக்
கொள்ளும் ! ! !
நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக
 ஏற்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !

அடுத்தவனுக்காக மாறி மாறி
 உனக்காக உள்ளோரை இழக்காதே ! ! !
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாகவே இரு !

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.
வாழ்க நலமுடன்

அரவிந்த் த. 

No comments:

Post a Comment