Wednesday, August 26, 2020

Monday, August 03, 2020

குமரி அன்னைக்கு


முக்கடல் கூட்டி பேரலை முழங்கி
மூக்குத்தி அணிபூண்ட கன்னி அன்னையை வணங்கி
அழியா பொற்குறள் நெறிவகுத்த
அய்யன் வள்ளுவன் கற்சிலை தாள் வணங்கி
முச்சங்கத்து முதற்சங்கம் கூட்டிய
மூத்தக்குடி பெருமான் நினைவுகள் வணங்கி
விஞ்சிய கடல் விழுங்கிய பெருநிலத்தின்
எஞ்சிய குறுநிலத்து நின்று திமிறும் தமிழ் வணங்கி
இடநாடும் நாஞ்சில் திருநாடும்
இணைந்தமைந்த எம் மூதாதையர் மண் வணங்கி
பாடுவோம் குமரிநிலத்தாய் புகழ் ஓங்கி முழங்கி

முத்திசை சூழ்ந்து கடலலை ஆட
வடதிசை அரணாய் மேற்கு தொடர்மலை நிற்க
ஆரல்வாய்மொழி கணவாயில் தலைவாசல் வைத்த
நாற்றிணை நிலங்களணிந்தவள் நளினம் காணீர்
கோதையும் பரளியும் ஆரணி அலைந்து
கோமகள் தாமிரபரணியாய் தவழும்
கொள்ளை அழகுக்கு ஈடிணை ஏதோ
மூலிகை காப்பக மருந்துவாழ் மலையும்
அகத்திய சித்தர் வாழ்ந்த குகையும்
கொண்டவள் கோலப் பொலிவை காணீர்

இரப்பர் மரங்களும் மிளகுக் கொடிகளும்
தேனூறும் மா பலா வகைகளும் பலவாய்
தென்னையும் வாழையும் மரசீனிக்கிழங்கும்
அருகிய நெடுந்துயர் பனைமர நுங்கும்
அக்கானியும் அகம்குளிர் கள்ளும்
முப்போக நெல்லும் அன்னையின் அடையாளங்கள்
சுவையான மீனுக்கும்
சுத்தமான தேனுக்கும் சொந்தக்காரி

போர்மூண்ட குளச்சல் கடல்துறைமுகத்தில்
போர்த்துகீசியன் தலைகொய்த வெற்றித் தூணும்
கர்மவீரன் காமராசன்
கட்டிய தண்ணீர் தொட்டிப்பாலமும்
பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளும்
ஆழமான சானலின் கரைகளும்
புத்தேரியின் பெருங்குளமும்
தோவாளை பூச்சந்தையும்
சிவாலயங்கள் பன்னிரெண்டு
முருகனுக்கும் பலவுண்டு
பகவதி அன்னைக்கும்
நாகராஜனுக்கும் கோயில்களுண்டு
வங்காள சிங்கம் விவேகானந்த சுவாமிக்கும்
கடலிடை பாறையில் மண்டபம் கண்டாள்
தூய சவேரியாருக்கு கோட்டாறு ஆலயம்
தூய தேவ சகாயம் பிள்ளையின்
குருதி படிந்த திருத்தலங்கள்
நேசமணி போக்குவரத்து கழகம்
பயணியர் பையில் பொதிச்சோறும்
அழகுத்தனித்துவ வழக்காடு தமிழும்
நித்திலமே கேள் எம்மன்னையின் பெருமை
எத்தனையெத்தனை எவரறிவாரோ

ஆய் அரசாய் ஆண்டார் அவளை
வேணாடாய் ஆண்டார்
மூவேந்தர் முக்கோனும் மாறிமாறி ஆண்டார்
திருவிதாங்கோட்டு வர்மாக்கள் முடிவாய் ஆண்டார்

அந்நாளில் கயவர் சாதிப்படிநிலை செய்து
அன்னை தன் முலைமூட உரிமை மறுத்தார்
அய்யா வைகுண்டரை அவதரிக்க செய்து
சாமித்தோப்பில் சமபந்தி வைத்தாள்
நீலகண்ட பிள்ளையை பெற்று
காற்றாடி மலையில் பலியிடக்கொடுத்தாள்
நீண்டு நீண்ட ஆண்டுகளோடி
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறில்
தாய்வீட்டு சொந்தம் தேடிக்கொண்டாள்
மதம் இனம் கடந்து தன் மக்களையெல்லாம்
மகத்தாய் ஒற்றுமையில் காத்துவைத்தாள்
உலகதரமிக்க திறன்களை திரட்டி
ஒவ்வொரு பிள்ளைக்கும் ஊட்டிவிட்டாள்
உன்னதமிக்க மாவட்டமென்று
அன்னைக்கு பிள்ளைகள் மகுடம் செய்தனர்

மீண்டுமிதோ இங்கொரு நாளில்
அகங்காரம் கொண்டு சில மாந்தர் வந்து
மதமூட்டி பேதமை பகையுமூட்டி
அன்னையை ஆயர்குல வணிகருக்கு விற்று
ஆதாயம் தேட முற்படுங்கால்
அன்னையின் பிள்ளைகளாய் ஒன்றிணைவோம்
கன்னியின் வனப்பை காத்திடுவோம்
என்றுமென்றும் பாடிடுவோம் ஒன்றாய்
குமரிநிலத்தாய் புகழ் ஓங்கி முழங்கி.

Ref : ஆஸ்வால்ட் ஹோப்பர் (தோழர்)

அரவிந்த் த.